உலகளவில் கால் பந்து, டென்னிஸ், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளுக்கு வரவேற்பு மிகுதி.. இந்தியாவில் கிரிக்கெட் அளவுக்கு வேறு எந்த விளையாட்டும் கொண்டாடப் படுவதில்லை. விளையாடத் தெரியாதவர்களைக் கூட ஈர்க்கிறது. முதியவர்களையும் விட்டு வைக்க வில்லை. கிரிக்கெட் விளையாட்டின் இயல்புகளே இதற்கு காரணம். சில போட்டிகளில் ஒவ்வொரு பந்தும் கவன ஈர்ப்பை ஏற்படுத்திவிடும்.. அடுத்தடுத்த பந்துகளில் இந்த ஈர்ப்பு அதிகமாகும். பார்போரைப் பரவசப்படுத்தும். இது ஓர் உணர்வெழுச்சி (emotional ) அனுபவம். வேறெந்த விளையாட்டிலும் இல்லாதது..கிரிக்கெட் நம்மை ஈர்ப்பதேன் ? தோல்வியில் நாம் துவண்டுப் போவதேன்? பல காலமாகச் சிந்தித்து வந்தேன். நானும் ஒருகாலத்தில் கிரிக்கெட் வீரன். வேறு விளையாட்டில் ஈடுபாடு காட்ட விடாமல் கிரிக்கெட் என்னை ஈர்த்தது. இந்த ஆய்வில் சுயப் பகுப்பாய்வும் அடங்கி உள்ளது. ஃப் ராய்டிய பகுப்பாய்வில் இதுவும் அடங்கும்.
இந்தியாவின் கில்லி-கோட்டி விளையாட்டு நாடுகடந்து கிரிக்கெட்டாகப் பரிணமித்தது என்கிறது வரலாறு. இது எந்தளவுக்கு உண்மை என்பதை இவ்வாய்வில் விவரித்துள்ளேன். இங்கு தொடங்கும் ஆய்வு நனவிலி ஈர்ப்புதான் கிரிக்கெட்டின் வெற்றி என்பதை நிறுவுகிறது. ஏனென்றால் காரணம் தெரியாமல் கிரிக்கெட்டால் ஈர்க்கபடுவோரே நாம். என் ஆய்வுப்படி, ஃப் ராய்ட் கூறும் நனவிலி சிக்கல்களான காயடிப்பு (castration ) அதுதொடர்பான சாவுணர்ச்சி (death instinct ) ஆகியவை மூலங்களாக உள்ளன.
திகிலுடன் பேய்ப் படம் பார்ப்பதுபோல் கிரிக்கெட்டைப் பார்த்து ரசிக்கிறோம். துன்ப அனுபவம் தந்தாலும் திகில் படத்தையும் கிரிக்கெட்டையும் ஒரே தளத்தில் ரசிக்கிறோம். நனவு மனதுக்குப் பிடிக்காது. இருந்தாலும் பார்க்கிறோம்.. காரணம் நனவிலிக்குப் பிடித்திருக்கிறது. இது ஃப் ராய்டிய அழகியல் (Freudian Aesthetics ) வட்டத்திற்கு உட்பட்டது.. கிரிக்கெட்டில் நனவிலி பங்கு மிகுதி. எப்படி என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது..
இக்கட்டுரை எனது ஃப் ராய்ட் யூங் லக்கான் : அறிமுகமும் நெறிமுகமும்
நூலில் இடம்பெற்றுள்ளது..
No comments:
Post a Comment